திருச்சி காவிரி ஆற்றின் அருகே ரூ.106 கோடி மதிப்பில் புதிய உயர் மட்ட பாலம்: நிலம் கையகப்படுத்த முடிவு…!
ஸ்ரீரங்கம் பகுதியை திருச்சியுடன் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் பழமையானது என்பதாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் அதன் அருகிலேயே மற்றொரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த மாநில நெடுஞ்சாலைத் துறையின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மேலாண்மைப் பிரிவு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறையான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி திருச்சி மாநகரில் உள்ள மேலசிந்தாமணி மற்றும் திம்மராயசமுத்திரத்தில் 9,000 சதுர அடி நிலத்தை நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி புதிய பாலம் மற்றும் அணுகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நிலம் கையகப்படுத்துவதற்காக சுமார் 32 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 12-13 வீடுகள் நெடுஞ்சாலைத் துறையின் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விதிமீறல் வீடுகள் என்று வரும்போது, நெடுஞ்சாலைத் துறையினர் கட்டிடங்கள் இழப்புகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால், பாலத்திற்காக கையகப்படுத்தப்படும் சட்டப்பூர்வ வீடுகள், நிலம் மற்றும் கட்டிடம் இரண்டிற்கும் இழப்பீடு கிடைக்கும். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக ஆட்சேபனை உள்ளவர்கள் திருச்சியில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பிரிவில் அடுத்த 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த 106 கோடி நிதியில், கட்டுமானப் பணிகளுக்கு 68 கோடியும், நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்க 30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 8 கோடி மற்ற செலவுகளுக்கும், சாலை பாதுகாப்பு அளவீடுகள் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக தெருவிளக்குகள் மற்றும் சந்திப்பு மேம்பாடு போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளுக்கும் செலவிடப்படும். புதிய காவிரி பாலம் 545 மீட்டர் நீளமும், 17.7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீரங்கத்தில் மேலசிந்தாமணி மற்றும் மாம்பழசாலை அருகே இந்த பாலம் அணுகு சாலைகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.