கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு- முதல் நாளில் சர்க்கரை பொங்கல் வழங்க ஏற்பாடு…!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாளை இனிப்பு பொங்கல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தொடங்கப்படும் முதல் நாளான நாளை அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரைப் பொங்கல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை ஆணையர் வே.அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும், வருகிற கல்வியாண்டுக்கான (2024-25) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன், மாநகராட்சி பள்ளிகள் என மொத்தம் 2,110 பள்ளிக்கூடங்களில் 4 லட்சத்து 38 ஆயிரத்து 500 மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் பயில உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.