Rock Fort Times
Online News

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்த வாலிபரால் பரபரப்பு…!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பகுதி மிகவும் பரபரப்பான பகுதியாகும். இந்த வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று (27-05-2024) ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு சுவரில் ஏறி நடந்து சென்ற வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தார். அப்போது அவர் அங்கிருந்த பவர் லைனில் சிக்கி மின்சாரம் தாக்கி படுகாயங்களுடன் கீழே விழுந்தார். இதனைப் பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் ஒரு கணம் திகைத்து நின்றனர். பின்னர், இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றவர் அஜித் (வயது 28) என்பதும், மணப்பாறையை சேர்ந்த இவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தில் அதுவும் காலை நேரத்தில் வாலிபர் ஒருவர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்