திருச்சியில் மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மழை காலம் வர உள்ளதால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்குள் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்கிற முனைப்பில் பணிகள் நடைபெறுகிறது. ஜீயபுரம் வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு இன்னும் ஒன்னறை மாதத்தில் ஒப்பந்தம் கோரப்படும். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமா? என்பது தெரியாது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். அந்த பேருந்து நிலையங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாது. அங்கு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். மாநகராட்சிக்கு வருவாய் வருவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம்.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தில் 520 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மாநகராட்சிக்கு 100 ஏக்கரும், 10 ஏக்கர் ஐ.டி பார்க் அமைக்கவும், 30 ஏக்கர் விளையாட்டு திடலுக்கும், காவல் நிலையத்திற்கு ஒன்னறை ஏக்கரும், மின்சார துறைக்கு இரண்டரை ஏக்கர், தீயணைப்பு துறைக்கு ஒன்னறை ஏக்கர் ஒதுக்கப்பட உள்ளது. 300 ஏக்கர் வரை கையிருப்பில் உள்ளது. வருங்காலத்தில் தேவைப்படும் போது அதை பயன்படுத்துவோம். திருச்சி மற்றும் சேலத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நிறைவடைந்து விட்டது. விரைவில் அது கொண்டு வரப்படும்.


திருச்சி மாநகராட்சி பகுதிகளில் விடுப்பட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ள ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகள் விரிவுப்படுத்தப்படும் போது அந்த பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். காலை உணவுத்திட்டம் தொடங்கிய போது ஒரு லட்சம் மாணவர்களுக்கு அது வழங்கப்பட்டது. அது தற்போது விரிவுப்படுத்தப்பட்டு இன்று 11 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவு படுத்தப்பட்டு அதனை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா கடிதம் கொடுத்ததாக பரவிய செய்தி வதந்தி. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.