நடிகர் மயில்சாமி பற்றி தவறான தகவல்களை வெளியிடும் யூடூயூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என அவரது மகன்கள் கூறி உள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவா்கள் பேசுகையில் என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும்,ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் நன்றி. என் அப்பாவின் ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன் நண்பர்கள் என்று சொல்வேன். இரண்டு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. சில யூடூயூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதுபோல தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் ” என மயில்சாமியின் மகன்கள் தெரிவித்தனர்.