Rock Fort Times
Online News

போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தூய்மை பணியாளர்கள் 100 பேர் கைது…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
அவர்கள் அனைவரும் கடந்த 31ம்தேதி முதல் வேலையிலிருந்து நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2-வது கட்டமாக போராட்டத்தில் ஈடுபட தூய்மை பணியாளர்கள் மற்றும் சிஐடியு வினர் இன்று(01-02-2024) ஸ்ரீரங்கம் ரங்கா, ரங்கா கோபுரம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் பேரிகார்டுகள் மூலம் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாருக்கும், சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் தொழிற்சங்கத்தினர் தடுப்புகளை தாண்டி சென்று ரங்கா, ரங்கா கோபுரம் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் மாறன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிசெயலாளர் தர்மா, வாலிபர் சங்க பகுதிசெயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், வெற்றிச்செல்வன், கணேசன், வீரமுத்து, ராஜமாணிக்கம், மகேஷ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்