Rock Fort Times
Online News

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 20 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு- “பாகுபலி” சிறந்த காளையாக தேர்வு…!

பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில், 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பவருக்கு முதல் பரிசாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டன. இதனைதொடர்ந்து, நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 910 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்று நடந்து கொண்டிருந்தபோது, மாலை 5.45 மணி அளவில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி அத்துடன் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. சிறந்த காளையாக சத்திரப்பட்டியை சேர்ந்த விஜய தங்கபாண்டியன் என்பவரது காளை தேர்வு செய்யப்பட்டது. அந்த காளைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 14 காளைகளை பிடித்து, அதிக காளைகள் அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபனுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் பரிசுக்கான கார் வழங்கப்பட்டது. இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று(16-01-2025) நடைபெற்றது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர். காளைகளை பிடிக்க வந்த மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றனர். இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 1,100 காளைகள் மற்றும் 900 வீரர்களுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடர்ந்து பல சுற்றுகளாக விறுவிறுப்பாக நடந்தது. இந்த போட்டியை காண்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்திருந்து ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த பல காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அபி சித்தர் என்ற வாலிபர் 20 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கிய ஸ்ரீதர் என்ற வாலிபருக்கு ஷேர் ஆட்டோவும், 10 காளைகளை அடக்கிய விக்னேஷ் என்ற வாலிபருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறந்த ஜல்லிக்கட்டு காளையாக “பாகுபலி” என்ற காளை தேர்வானது. அதன் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 70க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். பலத்த காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்