தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச தொடங்கியுள்ளது. அதிமுக- பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. திமுகவும் தங்கள் அணியை வலிமையாக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக, தவெக என பல பக்கத்தில் இருந்தும் கூட்டணிக்கு அழைப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், பாஜகவோடு சேர மாட்டோம். பாமகவோடும் சேர மாட்டோம்.இந்த கட்சிகள் இடம் பெறுகின்ற கூட்டணிலும் சேர மாட்டோம். இதனால் எந்தவித பாதிப்பு வந்தாலும் ஐ டோன்ட் கேர். எனக்கு பதவி மட்டுமே முக்கியம் என்றால் இதெல்லாம் என்னால் பேச முடியுமா.? புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஆனால், அது ஒரு தவறான வியூகத்தை கொடுத்து விடும். நாம் இருக்கிற அணியில் தொடர வேண்டும் என்ற காரணத்தால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. நாம் இருக்கிற அணி பலவீனமாக மாறிவிடும். பாஜகவிற்கு சாதகமாக உருவாகிவிடும். இதன் காரணமாகத்தான் இந்த விழாவை புறக்கணித்தேன். நான் நினைத்து இருந்தால் விஜய் உடன் செல்வதற்கு கதவு திறந்து இருந்தது என்று கூறலாம். அந்தக் கதவையும் மூடினேன். பாஜக தலைமையிலான கூட்டணி கதவையும் மூடினேன். அதிமுக பல தொகுதிகள் தருவதற்கு தயாராக உள்ளது. கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்பட தயாராக இருந்தது. போனால் துணை முதல்- அமைச்சர் பதவிக்காகவும் போகலாம். கூடுதலாக மூன்று, நான்கு அமைச்சர் பதவியையும் பெறலாம். இப்படி எல்லாம் ஆசை காட்டியதும் உண்டு. நீங்கள் நினைக்கின்ற சராசரி அரசியல்வாதி இல்லை இந்த திருமாவளவன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கின்ற கட்டாயம் ஏன் வந்தது. பாஜகவை எதிர்க்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் நான் அம்பேத்கரின் மாணவன். நான் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். தேசிய அளவில் வலுவான கட்சி, ஆளுங்கட்சியாக இனி காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலையில் பாஜகவுடன் இணைந்திருக்கலாம். ஆனால் உங்கள் திருமாவளவன் அந்த முடிவை எடுக்க மாட்டான் என தெரிவித்தார்.
Comments are closed.