தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை…!- 10 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்!
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் உமாசங்கர். புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கொலை, வழிப்பறி பாலியல் தொழில், என எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரவுடி பட்டியலில் இருந்தார். இவர் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவ்வப்போது தமிழகத்தில் தஞ்சம் புகுந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று(27-04-2025) பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா ஏற்பாடு பணிகளில் உமாசங்கர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். அப்போது நேற்று நள்ளிரவு சாமிப்பிள்ளை தோட்டம் ஜிஞ்சர் ஹோட்டல் அருகே பைக்கில் அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல், உமா சங்கரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதில் முகம், கை, உடல் முழுவதும் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். உமாசங்கர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் உறவினர்கள், ஆதரவாளர்கள், பாஜகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தி பிரேதத்தை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.