மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மாளிகையினை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று திறந்துவைத்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் …திருச்சி – தஞ்சை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்க சர்வீஸ் ரோடு, மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்க இதுவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் 3 முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ஒன்றிய அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். ஒன்றிய அரசிடம் நிதி ஒதுக்க சொல்லி வலியுறுத்தி வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, மாநில நெடுஞ்சாலைகளுக்கு ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மேல்மட்ட சாலை, அணுகு சாலை ஆகியவை விரைந்து அமைத்துக்கொடுக்கப்படும். ஏழு மீட்டர் அகலமுள்ள மாநில நெடுஞ்சாலையை 10 மீட்டராக மாற்றிவிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க கட்டணம் வசூலித்துவருகிறது. அந்த சாலைகளை கூட அவர்கள் முறையாக பராமரிப்பது கிடையாது. அத்தகைய சாலைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் என கேட்டுள்ளோம். ஒன்றிய அரசாங்கத்திடம் ஒத்துப்போகக் கூடிய மாநில அரசாக இருந்தால் மட்டும்தான் நாம் நினைப்பதை சாதிக்க முடியும். இங்கு முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதால் நாம் நினைப்பதை சாதிக்க முடியவில்லை. உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம் என்ற கொள்கையை பின்பற்றிவருகிறோம். மாநில அரசாங்கம் ஒன்றிய அரசாங்கத்தை மதித்து தான் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகளில் மாநில அரசு கொடுக்கக்கூடிய மரியாதையை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் ஒன்றிய அரசு நம் மாநிலத்திற்கு எவ்வித உதவியும் செய்வதில்லை என்று கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.