Rock Fort Times
Online News

திருச்சி துவாக்குடி அணுகு சாலை பணியை விரைவில் தொடங்கி வருகிற டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை…!

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை (அணுகு சாலை) அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக  சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், துவாக்குடியில் அணுகு சாலை அமைக்கும் பணியை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்று உத்தரவிட்டது. தீர்ப்பளிக்கப்பட்டு 4 வருடம் 8 மாதங்கள் கடந்த பின்பும் இந்நாள் வரை நிலம் கையகப்படுத்தும் பணியும், கட்டிடங்கள் மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் நல்வினை விஸ்வராஜ் தலைமையில், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் வக்கீல் சேக்ஸ்பியர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.பிரேம்குமார், மாவட்ட செயலாளர் மூ.சேட்டு மற்றும் திருச்சி மாவட்ட தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினர்.

மேலும், பிரதமர், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக ஆளுநர் உள்ளிட்டோருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், இது நாள்வரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாது துவாக்குடி அணுகு சாலை பணியை விரைவில் தொடங்கி இந்த 2024 டிசம்பர் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்