சாமானிய மக்களும் பங்கேற்கலாம்; இனி அனைத்து டெண்டர்களும் ஆன்லைனில் மட்டுமே…- அமைச்சர் ரமேஷ் அதிரடி..!
இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் (ஒப்பந்தபுள்ளி) இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய ஆணையரக அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து கோயில்களுக்கும் முறையான உறுதிமொழி படிவங்கள், ஒப்பந்தத்திற்கான விண்ணப்பங்கள் ஆகியவை ஒரே மாதிரியான வடிவங்களாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளோம். இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். அதற்கான ஏலமும் ஆன்லைனில் நடக்கும். அந்த வகையில் பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு பொதுவான டெண்டர் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பல கோயில்களில் EMD எனப்படும் வைப்புத் தொகையும், செக்யூரிட்டி தொகையும், கோயில்களுக்கு கோயில் இதுவரை மாறுபட்டு இருந்தது. இனிமேல் வைப்புத் தொகை ஒரு சதவிகிதமாகவும், செக்யூரிட்டி தொகை 5% ஆகவும், டெண்டர் தொகையிலிருந்து பெறப்படும் என நிர்ணிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பான் இல்லாமல் எந்த டெண்டருக்கும் அனுமதி கிடையாது. ஏலத்தில் குறைந்த விலையில் டெண்டர் கோருபவர்களுக்கே இதுவரை டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால் இந்த நடைமுறையை மாற்றி, குறைவான மதிப்பில் யார் டெண்டர் கோருகிறார்களோ, அவர்களுக்கு மேலும் நேரம் வழங்கி, மேற்கொண்டு குறைந்த மதிப்பில் யார் டெண்டர் கோருகிறார்களோ, அவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மிகக்குறைந்த விலைக்கு கோயில்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய முடியும். மேலும் ஒருத்தருக்கே டெண்டர்களை வழங்காமல் இரண்டு மூன்று பேர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளும் பின்பற்றப்பட உள்ளது.
கோயில்களில் பணியாட்கள் நியமனம் செய்வதற்கான டெண்டர் கோருப்பவர்கள் பணியாட்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது அவசியம். கோயில்களில் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சேலரி ஸ்லிப் வழங்கப்படும். பெருமுதலாளிகள் மட்டுமல்லாது, சிறு சிறு நபர்களும்
டெண்டரில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.