திருநெல்வேலி- சென்னை ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கியது…
பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று(24-9-2023) தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலி பரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞான திரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்ததும் அங்கிருந்த வர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். பின்னர், திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட இந்த ரயிலில் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வரை பயணித்தார். அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை மாலை 5.05 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த வந்தே பாரத் ரயில் நாளை(25-9-2023) முதல் முழுமையாக பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. இதற்கான கட்டணம் மற்றும் முன்பதிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.