3 நாட்கள் தொடர் விடுமுறை: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்…! (வீடியோ இணைப்பு)
பிற மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் பணி நிமித்தமாகவும், படிப்பு சம்பந்தமாக மாணவர்களும் திருச்சியில் தங்கி இருக்கின்றனர். இந்தநிலையில் வருகிற திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். மேலும் , பலர் தங்களது உறவினர் வீடுகளுக்கு செல்ல ஆயத்தமாகி திருச்சி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் , பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் செல்லும் பேருந்துகளுக்காக பயணிகள் அதிக நேரம் காத்திருந்து அந்த ஊர் பேருந்து வந்ததும் ஓடிச் சென்று ஏறும் நிலை உள்ளது. பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால் அந்தந்த ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க பேருந்து நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.