விசாரணைக்கு அழைக்கும் நபர்களை போலீசார் எக்காரணம் கொண்டும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தமிழக போலீசார் விசாரணைக்காகப் பொதுமக்கள அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து இந்த உத்தரவை வழங்கியுள்ளார். விசாரணைக்கு அழைக்கப்படும் சந்தேகத்திற்குரிய நபர்களையோ அல்லது சாட்சிகளையோ போலீசார் எவ்வித சித்தரவதைக்கும் ஆளாக்கக் கூடாது. ஒருவரை விசாரணைக்கு அழைக்க வேண்டுமானால் செக்சன் 179 விதிகளின் கீழ் எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்பப்பட வேண்டும். அந்தச் சம்மனில் கூறப்பட்டுள்ள நபர் எந்தத் தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விசாரணைக்கு வரும் நபரிடம் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது. இந்த விதிகளை மீறிச் செயல்படும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

Comments are closed.