Rock Fort Times
Online News

கையில் கறை இருப்பதால் தான் மத்திய அரசுடன் திமுக அரசால் சண்டை போட முடியவில்லை- திருச்சியில் சீமான்…!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளே டெபாசிட் இழந்துள்ளார்கள். தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல் துறை உள்ளிட்ட அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தார்கள்.
பா.ஜ.க. வாக்குகள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது என கூறுவது தவறானது. பா.ஜ.கவும், அதிமுக வும் நாங்கள் வளர வேண்டும் என எப்படி நினைப்பார்கள்.என்னுடைய கோட்பாட்டின்படி நான் தனித்து தான் நிற்பேன். யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். நான் திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் எதிரானவன். என்னை பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் என கூறுவது யூகம் தான்.
ஊழல், லஞ்சம் இல்லாத நாடாக டென்மார்க், நியூசிலாந்து போன்ற பல நாடுகள் உள்ளன. காமராஜர், அண்ணா, ராஜாஜி உள்ளிட்டோரே ஊழல் இல்லாத ஆட்சியை தந்துள்ளார்கள். பெரியார் குறித்து ஓவராக நான் பேசிவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். நான் இப்போது தான் தொடங்கியே இருக்கிறேன். இதுவே ஓவர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான். பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில் தான் நான் இருந்தேன். தற்போது ஒரு தெளிவு வந்துள்ளது. பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டிய கொள்கை இல்லை என தெரிந்த பின்பு எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் கருத்தை கூற ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உரிமை உண்டு. மத்திய அரசு நிதி தரவில்லை என புலம்புவதற்காக 40 எம்பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்க வில்லை. இந்தியாவின் வரி வருவாயை பெருக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நான் முதலமைச்சரானால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லையென்றால் வரி கொடுக்கமாட்டேன். கையில் கறை இருப்பதால் தான் தற்போதைய திமுக அரசால் மத்திய அரசுடன் சண்டை போட முடியவில்லை.
நிதி இல்லை என கூறுபவர்கள் பல நூறு கோடியை தேர்தலுக்கு செலவழிக்கிறார்கள். எனக்கு தொண்டை சரியில்லாமல் போய் விட்டது. இல்லையென்றால் பெரியார் குறித்து இன்னும் அதிகமாக பேசியிருப்பேன். எனக்கு சொந்த பெரியார் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எங்கிருந்தோ வந்த பெரியார் எனக்கு தேவையில்லை. ஈழத்தில் நேதாஜி படம் இருந்தது, எம்ஜிஆர் படம் இருந்தது, அங்கு பெரியார் படம் இல்லை. விடுதலைப்புலிகள் சாக வேண்டும் என நினைத்தது திராவிடம். பிரபாகரன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.அவரை எதிர்ப்பேன். பெரியார் எங்களுக்கு தேவையில்லை. எனக்கு தேவையில்லை. என்னை பின்பற்றுபவர்கள் பெரியார் தான் வேண்டுமென்றால் என்னை விட்டு விலகி செல்லலாம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்