நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைராஜ்(வயது 52). அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் பேட்டை ரூரல் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தவர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18- வது வார்டு வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக டாஸ்மாக் பாருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் நின்றிருந்த மர்ம நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிச்சைராஜை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். நெல்லை மாநகரப் பகுதியில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.