தமிழக காங். சட்டமன்ற குழு உறுப்பினரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் ராஜேஷ் குமார். கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை அவர் தடுத்தி நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று(21-04-2025) அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஹெர்குலஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு வழங்கினார். வழக்கில் 3 பேர் உயிரிழந்து விட, எஞ்சிய 3பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. ராஜேஷ்குமார் உள்ளிட்ட 3 பேருக்கு மூன்று மாத சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. 3 மாதங்கள் சிறை தண்டனை என்பது ராஜேஷ்குமாரின் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு இடையூறாக இருக்காது. ராஜேஷ் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.