Rock Fort Times
Online News

கோவையில் ஏப்ரல் 26, 27 தேதிகளில் த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம்- விஜய் பங்கேற்கிறார்… !

கோவையில் ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்து கொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம். தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள். இந்தக் கருத்தரங்கில், தலைவர் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாக கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார். ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும் நம்
கழக தலைவர் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள விஜய் கரங்களுக்கு வலு சேர்ப்போம். வாகை சூடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்