ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு : கடைக்குள் புகுந்த பேருந்து…
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிரைவர் உயிரிழப்பு..
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் புங்கனூர் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மேலப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவர் கணபதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால், நெஞ்சு வலியால் துடித்த அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டே பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் இடது புறத்தில் இருந்த கடைகளில் மோதி நின்றது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகள் கணபதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் ஏற்கனவே இதுபோன்று இரண்டு விபத்துக்கள் நடந்துள்ளது . அதில், ஒரு விபத்தில் திருமணம் ஆகி ஒரு வாரமேயான புது மாப்பிள்ளையான ரயில்வே ஊழியர் இறந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.