Rock Fort Times
Online News

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்துக்கு “சீல்”…!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்காக மதிய உணவில் முட்டை வழங்கப்படுகிறது. ஆனால், அந்த முட்டைகளை சிலர் முறையாக மாணவர்களுக்கு வழங்காமல் கள்ளத்தனமாக உணவகத்திற்கு விற்று வருகின்றனர்.  இதனை மெய்ப்பிக்கும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் அட்டை, அட்டையாக சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதுகுறித்த தகவலின் அடிப்படையில் அந்த உணவகத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது. அந்த உணவகத்திற்கு சத்துணவு முட்டைகளை சப்ளை செய்த சத்துணவு பெண் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதேபோல, திருச்சி மாநகரப் பகுதியான  எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சத்துணவு முட்டைகள் மூலம் ஆம்லெட், ஆம்பாயில் போன்றவை போட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அந்த உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது அங்கிருந்த முட்டைகள் சிலவற்றில் தமிழக அரசால் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்தவரும், திருச்சி கே.கே.நகர் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி சத்துணவு மையத்தில் சமையலராக பணியாற்றி வரும்  சத்யா (43) என்பவர் முட்டைகளை உணவகத்திற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.  மேலும்,  அவரது கணவர் ரகுராம் (43) முட்டை மொத்த வியாபாரம் செய்து வருவதாகவும், அவர்மூலமாக சத்துணவு முட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.  இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில்  எடமலை பட்டிபுதூர் போலீசார்  கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.  மேலும், இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்துக்கு “சீல்” வைக்கப்பட்டது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்