திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் கர்நாடகா அரசு உடனடியாக திறந்து விட வேண்டும். விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
39 ஆவது நாளான நேற்று விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி, வெண்டைக்காயை மாலையாக அணிந்தும், சாலையில் கொட்டியும் போராட்டம் நடத்தினா். இதனால் அவா்கள் கைது செய்யப்பட்டு நேற்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், காவல்துறையினரின் தடையை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது 7 பிரிவுகளின் கீழ் திருச்சி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்போராட்டத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 40வது நாளான இன்று ( 05.09.2023 ) விவசாயிகள் பாடைகட்டி ஒப்பாரிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.