இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. போலீசார் தங்கள் சோதனையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்றில் பெரியளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், பூக்கடை உதவி ஆணையர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.1.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கே இருந்த 3 பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களில் பணத்தை வைத்திருந்தது யாசர் அரபாத் என்பதும், மற்றொருவர் அதனை வாங்க வந்த ஜெயின் என்பதும், இன்னொருவர் அவருக்கு உதவியாக வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ரூ.1.42 கோடி சிக்கியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.