Rock Fort Times
Online News

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு- 3 பேராசிரியர்கள் மீது புகார் கடிதம்…!

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரை சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (வயது 27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர் அங்குள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவம் மேற்படிப்பு (எம்டி) படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அவர் நேற்று முன்தினம் தான் தங்கி இருந்த அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து சக மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில், கல்லூரி தரப்பு மருத்துவர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் தந்தை சிவக்குமார், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மூத்த மகள் சுஜிர்தா சென்னையில் தனியார் கல்லூரியில் எம் பி.பி.எஸ்.முடித்த பின்னர் குலசேகரம் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பு படித்து வந்தார். கடந்த ஆறாம் தேதி மாலை கல்லூரி நிர்வாகம் சார்பில் என்னிடம் செல்போனில் பேசியவர், சுஜிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது மகளின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், தக்கலை டிஎஸ்பி உதயசூரியன் மற்றும் போலீசார் கல்லூரி விடுதியில் நடத்திய சோதனையில், சுஜிர்தா ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஒரு பெண் பேராசிரியை உட்பட 3 பேராசிரியர்கள் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு பேராசிரியர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சுஜிர் தா, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மூன்று பேராசிரியர்களிடமும் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் கூறும்போது, மாணவியின் தற்கொலை குறித்து மூன்று கோணங்களில் விசாரணை நடக்கிறது. அவருக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். எனினும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர், மாணவியிடம் செல்போனில் பேசியதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதேநேரம் சென்னையில் உள்ள ஒருவரிடம் மாணவி அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். மாணவி தற்கொலை சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்