தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தபிறகு பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் 717 ஒயின்ஷாப்புகளை மூட சமீபத்தில் விஜய் உத்தரவிட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தவகையில், திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த ஒயின்ஷாப்பிற்கு அருகிலேயே சர்ச், கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இப்பகுதியில் தினந்தோறும வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும் இந்த பகுதியையே கடந்து செல்ல வேண்டியிருந்தது. மது போதையில் வாலிபர்கள் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையானது. மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக பைக்குகளை நிறுத்துவது, திறந்த வெளியிலேயே மது அருந்துவது,சில சமயங்களில் போதை தலைக்கேறி ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வது, என சமூக அவலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று(மே.15 ) புத்தூர் நால்ரோட்டில் இயங்கி வந்த ஒயின்ஷாப்பிற்கு அதிகாரிகள் சீல் வைத்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய நடவடிக்கையை எடுத்த தமிழக முதல்வர் விஜய்க்கும், அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Comments are closed.