திருச்சி மாவட்டம் வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன்(வயது 43). இவருடைய மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பாலச்சந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் வீட்டிலேயே அதிகாலையில் சமோசா தயாரித்து அவற்றை கடைகளுக்கு சென்று விற்பனை செய்து வந்தார். இதற்காக அவர் அதிகாலை 3 மணிக்கே மனைவியை எழுப்பி வந்துள்ளார். இது மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை.
மேலும், மனைவியின் நடத்தையில் பாலச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் தினமும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 16-3-2019 அன்று அதிகாலை சமோசா தயாரிக்க மனைவியை, பாலச்சந்திரன் எழுப்பியுள்ளார். அப்போது என்னை தூங்க விடாமல் அதிகாலையிலேயே எழுப்பிக்கொண்டு இருக்கிறீர்களே என்று , மனைவி சலித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலச்சந்திரன் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசந்திரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில், பாலச்சந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வக்கீல் ஜாகீர்உசேன் ஆஜர் ஆனார். தாயார் இறந்துவிட, தந்தை சிறை சென்றுவிட அவர்களின் 2 மகன்களும் தற்போது திருப்பராய்துறையில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.