திருச்சி, ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் 5 பேரை தட்டி தூக்கியது காவல்துறை…!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (எ) சுரேஷ் (35), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ், மனைவி ராகினியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி மாநகர துணை ஆணையர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகினியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தலைவெட்டி சந்துரு, ஆட்டுக்குட்டி சுரேஷ் ஆகியோர் ஒன்றாக ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் இனாம் பூக்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (வயது 28), திருவானைக்காவல் சக்தி நகரை சேர்ந்த குமார் மகன் ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரர்(36), ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.ரோடு சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் விமல் என்கிற விமல் ராஜ் (24), தளவாய் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் சூர்யா என்கிற சூரிய பிரகாஷ் (31), டிரைனேஜ் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த ரங்கையன் மகன் பாலகிருஷ்ணன் ( 29) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தப்பி ஓடிய ஸ்ரீரங்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஹெல்மெட் பிரசாத் ( 19 )என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான நந்தகுமார் ஸ்ரீரங்கம் பகுதி தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவுடி கொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே 5 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.