முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்- திருச்சியில் முத்தரசன்…!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் அணியின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று(22-06-2024) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. கள்ளச்சாராயம் தொடர்பாக திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து 4.63 லட்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.4.61 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சட்டமன்றத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
ஆனால், காவல் துறையில் பணியாற்றும் சில கருப்பு ஆடுகள் கள்ளச்சாராய கும்பலோடு தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இது கட்சி பிரச்சினை பேசும் விஷயம் கிடையாது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். கள்ளச்சாராய விவகாரம் விக்கிரவாண்டி தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இடைத்தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். கள்ளச்சாராய விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஒரு சம்பவத்திற்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது பல முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் முதலமைச்சராகவே இருந்திருக்க முடியாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறியவர் தான் அவர். எந்த முதலமைச்சர் ஆவது அவ்வாறு கூறுவார்களா?. ஆனால் தற்போதைய முதலமைச்சர், நான் ஓடி ஒழிய மாட்டேன் என சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் அது நடைமுறையில் வெற்றி பெறாது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டிலும் அதை செயல்படுத்தலாம். குஜராத் துறைமுகத்திலிருந்து தான் போதை பொருட்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. அங்கு தடுத்தால் தமிழ்நாட்டிற்கு வராது என்றார்.அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.