தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 5) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘வெற்றி தமிழகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல், ஆளுநர் உரை, தொழில் முதலீடுகள், டாஸ்மாக் விவகாரம், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, சட்டமன்றத் தேர்தலில் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவைக் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார். “அமைச்சர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும், லஞ்சம் லாவண்யம் இருக்கக் கூடாது.அவ்வாறு யார் மீதாவது புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமைச்சர்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அமைச்சர்கள் மட்டுமின்றி அவர்களின் கீழ் பணியாற்றக் கூடியவர்களும் தவறு செய்யாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ” கிளீன் கவர்மெண்ட்’ ஆக பணியாற்றுவதே இலக்கு. நாம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர வேண்டும். திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதையும் அமைச்சர்கள் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தவெக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.