Rock Fort Times
Online News

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. சனாதனம் ஒழியணும்…* உதயநிதி உறுதி!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 11ம் தேதி சட்டப்பேரவை கூடிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர். இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் சனாதானம் பற்றி பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது அவர் அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படவில்லை என்பதை காட்டுகிறது” என கூறினார்.

இந்தநிலையில் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் சனாதனம் பற்றி தான் பேசிய கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்ன்னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் விமர்சனம் பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, சமூகத்திலேயும் எல்லாருக்கும் சம உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி – கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனால், சமத்துவமின்மையையும், அடக்குமுறையையும் கடுமையா எதிர்ப்போம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்