லால்குடி அருகே உள்ள அன்பில் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா… * கூடை, கூடையாக பூக்களை சாற்றி பக்தர்கள் வழிபாடு!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலின் உப கோவிலான இங்கு பங்குனி தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று(16-03-2025) பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக விளங்கும் இந்த கோவிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் இருந்து கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் பூக்களை கூடையில் ஏந்தி, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனா். பூச்சொரிதல் விழாவையொட்டி உலக மக்களின் நன்மைக்காக அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியது. மேலும், அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கூடை, கூடையாக பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவில் இணை ஆணையா் மாரியப்பன் தலைமையில் கோவில் குருக்கள், பணியாளா்கள் செய்திருந்தனர்.
Comments are closed.