திருச்சியில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ – டிரைவரின் சுதாரிப்பால் பயணிகள் உயிர் தப்பினர் ! (வீடியோ இணைப்பு)
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. சுமார் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் அப்பேருந்தில் பயணம் செய்தனர். இந்நிலையில் திருச்சி, மன்னார்புரம் பகுதியில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் டயர் வெடித்துள்ளது. சுதாரரித்துக்கொண்ட ஓட்டுனர் உடனடியாக, பேருந்தை நிறுத்தி விட்டார். டயர் வெடித்த இடத்தில் இருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பேருந்தை விட்டு இறங்கி உள்ளனர். லேசாக பற்றிய தீ, சற்று நேரத்தில் பேருந்து முழுவதும் பரவி மளமளவென பற்றி எரிந்தது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் பற்றிய தீயை முழுவதுமாக அணைத்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கி விடப்பட்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தில் டயர் வெடித்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்துக்கும் வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.