கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்கார வழக்கு:சஞ்சய்ராய் குற்றவாளி, ஜனவரி 20-ம் தேதி தண்டனை அறிவிப்பு…!
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்த ஆண்டு அங்குள்ள கருத்தரங்க கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல்வாதிகள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
இந்தவழக்கு கொல்கத்தா செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று(18-01-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் சஞ்சய்ராய் குற்றவாளி என அறிவித்த நீதிபதி
அனீர்பான் தாஸ், தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Comments are closed.