திருச்சி, பஞ்சப்பூரில் ரூ.315 கோடியில் 6 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமையுது டைடல் பார்க்: அனுமதி அளித்தது சுற்றுச்சூழல் துறை…!
திருச்சியில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. இந்த பேருந்து நிலையம் அருகிலேயே டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 14.16 ஏக்கரில் ரூ.315 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் டைடல் பார்க் அமைய உள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 9.97 ஏக்கரில் ரூ.289 கோடியில் டைடல் பார்க் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும். இதன்மூலம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலிபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும், தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனம் சார்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பார்க்களை அரசு அமைத்து வருகிறது. எனவே சென்னை ,கோவை போல திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. இந்த டைடல் பார்க்கில் 740 கார் நிறுத்துமிடம் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க் மூலம் 5000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்ட கட்டுமான பணிக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே கட்டுமான பணிகள் தொடங்கிவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் சுமார் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருச்சி, மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க்குகளுக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.
Comments are closed.