சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம், ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தொகுதி முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டி விட்டும், பரிசுப் பொருட்களுக்கான டோக்கன்களை விநியோகம் செய்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள்போல பயன்படுத்தியுள்ளார்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். வழக்கின் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்தவழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.