Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்தவருக்கு காத்திருந்த பேரிடி!தமிழ் தெரியாத வட மாநில பணியாளரால் சர்ச்சை ( வீடியோ இணைப்பு )

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருச்சி விமான நிலைய வளாகத்தில் கட்டண கார் பார்க்கிங் உள்ளது.விமானத்தில் திருச்சி வந்த தனது உறவினரை பிக்கப் செய்ய வந்த ஒருவர் கட்டண கார் பார்க்கிங்கில் நான்கு மணி நேரம் காரை நிறுத்துவதற்கான பணத்தை செலுத்தியுள்ளார். நிர்ணயித்த அளவைவிட கூடுதலாக கார் பார்க்கிங் செய்யப்பட்டதால், அதற்காக கூடுதலாக ரூபாய் 500 அபராதம் செலுத்த வேண்டும் என கார் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்பவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அபராத தொகையை கார் உரிமையாளர் ஒப்புக்கொண்ட போதிலும், காரின் சாவியை எடுத்துக்கொண்டு உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்காமல் கார் பார்க்கிங்கில் கட்டணம் வசூல் செய்பவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்க முயன்ற போது தனக்கு தமிழோ ஆங்கிலமோ தெரியாது. ஹிந்தி மட்டுமே தெரியும் என அசால்டாக பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். எங்கள் மொழியான தமிழை தெரிந்து கொள்ளாமல் உங்களை திருச்சி விமான நிலையத்தில் பணியமர்த்தியது யார் ?என்பது குறித்து கேள்வி எழுப்பியதோடு, அங்கு நடந்த விவாதத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருச்சி விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் அங்கு தமிழ் பேச தெரிந்தவர்களை பணி அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பயணிகள் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்