திருச்சி, திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி நத்தமாடிப்பட்டியில் கல்லறை குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். அந்தவகையில் சில இளைஞர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை ஒன்று அங்கும், இங்குமாக சுற்றித் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை ஊர் பொதுமக்களிடம் கூறினர். அவர்கள் உடனே திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்து குளத்தின் அருகில் எச்சரிக்கை பலகை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், முதலை இன்னும் பிடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த குளத்தில் மூன்று மாதமாக முதலை இருக்கிறது. இதுகுறித்து வனத்துறைக்கு தெரிவித்தும் இதுவரை
முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், குளத்தில் இறங்கவே பயமாக இருக்கிறது. ஆகவே முதலையை விரைவில் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed.