திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் “ரோடு ஷோ”- சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு…!
திருச்சி மாநகரில் நிலவும் வாகன நெரிசலை குறைக்கவும், பொது மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கவும் திருச்சி அருகே உள்ள பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 9) திறந்து வைக்கிறார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். பின்னர் அவர் சாலை மார்க்கமாக துவாக்குடி சென்று அங்கு கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள
நடிகர் திலகம் சிவாஜி சிலையை திறக்க புறப்பட்டுச் சென்றார். முன்னதாக முதல்வர், டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகையில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், முதல்வர் சுற்றுலா மாளிகையில் இருந்து அரசு மருத்துவமனை வரை சாலையில் நடந்து வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க என்று உற்சாகமாக குரல் எழுப்பினர்.
ஒரு சிலர் அவருக்கு சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கினர். ஒரு சிலர் கோரிக்கை மனு அளித்தனர். அதனை இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட அவர் தொடர்ந்து சிவாஜி சிலை வரை நடந்து சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவா எம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் நடந்து சென்றனர். பின்னர் சிவாஜி சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டுச் சென்றார். நாளை ( மே 9) காலை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதுடன் பெரியார், அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டாக்களை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
Comments are closed.