விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் பாடினார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறுகையில், இந்த பாடல் ஏற்கனவே பாடப்பட்டது தான். நாங்கள் புதிதாக எழுதி பாடவில்லை. இதில், சாட்டை துரைமுருகன் பாடியதில் என்ன தவறு இருக்கிறது. அவரை எதற்காக கைது செய்தார்கள்?. அந்த பாடலை நானும் பாடுகிறேன் என்று பாடிக் காட்டினார். இந்நிலையில், ஒரு சமூகத்தின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடியதாக சீமான் மீது சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து புகார் கொடுத்த நபர், மாநில தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையத்தில் முறையிட்டார். இதுதொடர்பாக, தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையம் விசாரணை நடத்தி சீமான் மீது வழக்கு பதிய உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, அருந்ததியர் இனம் குறித்து இழிவாக பேசிய வழக்கு ஒன்றும் சீமான் மீது உள்ள நிலையில் தற்போது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.