Rock Fort Times
Online News

சிறுவனின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது: முதியவரை கொலை செய்ததாக பெண்கள் உள்பட 3 பேர் கைது…!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள உடையவர் குலத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 77). இவருக்கு கோமதி என்ற மகளும், 3 பேரன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சரசு(55). இவருடைய மகள் மாலதி(40). இவருடைய மகன் 16 வயதான சிறுவன். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே இடம் சம்பந்தமாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி இரவு சரசுவின் பேரன் 16 வயது சிறுவன் கல்லை தூக்கிப்போட்டு விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட வெங்கடாசலம் தனது பேரன்கள் மீது கல்பட்டு விடும் என்று கூறி சிறுவனை கண்டித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாய், பாட்டி ஆகியோரிடம் கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு வந்து வெங்கடாசலத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது வழக்கு போட வேண்டாம் சமாதானமாக செல்வதாக இரு தரப்பினரும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த வெங்கடாசலத்தை அன்று இரவு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் கோமதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவன், தாய், பாட்டி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் 2 பேரையும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். சிறுவனை திருச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்