குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அஞ்சலி
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ் ஒன்றில் 61 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று மாலை கோவைக்கு புறப்பட்டனர். மாலை 5-30 மணி அளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கடையத்தைச் சேர்ந்த கலா( வயது36) , விஜய சுப்பிரமணி மகன் நிதின்(15) மற்றும் முப்பிடாதி அம்மாள்(67), முருகேசன்(65), கௌசல்யா(29), இளங்கோ(64), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பஸ்ஸில் அடியில் சிக்கிக் கிடந்த பத்ம ராணி (57) என்பவர் இன்று பிணமாக மீட்கப்பட்டார். இதனால், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.
அவர்களின் உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறியதுடன் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.50,000 காசோலையை வழங்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.