Rock Fort Times
Online News

திருச்சி துவாக்குடியில் உள்ள பிரபல வங்கியில் திடீர் தீ விபத்து …!

திருச்சி-தஞ்சை சாலையில் துவாக்குடி பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் எஸ்பிஐ வங்கி உள்ளது. இந்த வங்கியில் தொழில் நிறுவனங்களும் அப்பகுதி பொதுமக்களும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். எப்போதும் பரபரப்பாக செயல்படும் இந்த வங்கிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் வங்கியின் உள்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்ட வங்கி காவலாளி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், வங்கி அதிகாரிகளுக்கும், துவாக்குடி போலீஸா ருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் திருவெறும்பூர், பெல், நவல்பட்டு ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் வங்கியிலிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி மேலாளர் பிரசாந்த் கூறுகையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம்.

சேதாரத்தின் மதிப்பு குறித்து மேலதிகாரிகள் பார்வையிட்ட பின் கணக்கீடு செய்யப்படும் என்றார். வங்கியில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அடகு வைக்கப்பட்ட தங்களது நகைகள் மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள நகைகள் மற்றும் ஆவணங்கள் என்ன ஆனதோ என்று வாடிக்கையாளர்கள் அச்சப்பட்டனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்