திருச்சி மாவட்டம், மணிகண்டம் யூனியன் ஆபீஸ் அருகேஉள்ள வைகை நகர் பகுதியில் ராஜராஜன் என்பவரது வீட்டில் இன்று(10-05-2025) காலை 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. அப்போது அந்த வீட்டின் வளர்ப்பு நாய் ‘டைகர்’ இதனைப் பார்த்து லொள்… லொள்… என்று குரைத்த வண்ணம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜராஜனின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது நாய் குரைத்த மூலை பகுதியில் பாம்பு பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதனால், சுதாரித்துக் கொண்ட அவர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சத்திய வர்தனன் தலைமையில், ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று உயிருடன் விட்டனர். பிடிபட்ட பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை சரியான நேரத்தில் நாய் கண்டுபிடித்ததால் பாம்பு பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.