திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு ஊராட்சியில், தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வந்தது. சாலையோரம் உள்ள இடத்தை ஆக்கிரமித்தும், அருகில் உள்ள கோவில் சுற்றுச்சுவருடன் சேர்த்து ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்டு பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பள்ளி கூரைக்குமேல் மரக்கிளைகளும் இருந்தன. பாதுகாப்பற்ற முறையில் இந்தப் பள்ளி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்த தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் , பள்ளியில் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் நிலையான கான்கிரீட் கூரையுடன் பாதுகாப்பான வகையில் கட்டிடம் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும், இல்லையேல் அங்கீகாரம் புதுப்பிக்கப்பட மாட்டாது என எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டிடத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதனைத்தொடர்ந்து கல்வித்துறையினர், கடந்த 5-ம் தேதி மீண்டும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் மாற்று ஏற்பாடு செய்வதாக பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். ஆனால், 10-ம் தேதி வரை பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட அந்த பள்ளிக்கு சீல் வைக்க தனியார் பள்ளிகளின் அலுவலர் சந்திரசேகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து கல்வித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று ( 16.06.2023 ) மாலை, அப்பள்ளியை மூடி சீல் வைத்தனர். குறிப்பிட்ட இந்த பள்ளிக்கு நிலையான கட்டடமோ, பாதுகாப்பு அம்சங்களோ இல்லாத நிலையில், காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பள்ளி செயல்பட தடையின்மை சான்று வழங்கியுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் விண்ணப்பித்து பள்ளி நிர்வாகம் அங்கீகாரத்தை புதுப்பித்து செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அளுந்தூர் பகுதியில் இயங்கி வந்த 3 பள்ளிகள், நீர் நிலை புறம்போக்கு இடத்தில் இயங்கி வந்ததையடுத்து கடந்த 11-ம் தேதி சீல் வைக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.