20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்..
திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.பேட்டி..
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவரும் , பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை ஒட்டி20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைச்சாலைகளில் வாழ்நாள் தண்டனை பெற்று இருக்கக்கூடிய முஸ்லிம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோவை மண்டல த.மு.மு.க. சார்பில் வருகிற ஜூலை மாதம் 9-ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 2019-20- ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சூழலில் மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்துவிட்டது. அந்த கல்வி உதவித்தொகையை தமிழக அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. உள்ளது. அதில் இருந்து அவர்கள் ஒருபோதும் வெளியே வர முடியாது. அவர்கள் இருவரும் சண்டை போடுவதுபோல் நாடகம் நடத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அப்துல்சமது எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.