சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக முப்பெரும் விழா இன்று(19-09-2026) விமரிசையாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திராவிட இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கழகத்திற்கும், சமுதாயத்திற்கும் அரிய பணியாற்றிய பல்வேறு நிர்வாகிகளுக்கும் சான்றோர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கழகச் சார்பிலும் அறக்கட்டளைகள் சார்பிலும் பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, கழக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவாவிற்கு ‘கலைஞர் விருதும்’, ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப.திருமாவேலனுக்கு ‘முரசொலி செல்வம் விருதும்’, கழக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவிற்கு பெரியார் விருதும்’ வழங்கப்பட்டன. மேலும், சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷிற்கு ‘அண்ணா விருது’, கழக மருத்துவர் அணித் தலைவரும் முன்னாள் எம்பியுமான கனிமொழி என்.வி.என்.சோமுவிற்கு ‘பாவேந்தர் விருது’, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கு ‘பேராசிரியர் விருது’ மற்றும் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜாவிற்கு ‘மு.க.ஸ்டாலின் விருது’ ஆகியவற்றை வழங்கி மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

Comments are closed.