“தமிழக வெற்றிக் கழகத்துடன் எங்களது பயணம் தொடரும்”…* முதல்வர் விஜய்யை சந்தித்த பின்னர் திருமாவளவன் பேட்டி..!
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. இதில் விசிக-வின் பங்கு மிகப்பெரியது. விஜய்யின் ஆட்சி அமைய உத்தரவாதம் அளித்தாலும், அமைச்சரவையில் பங்கு பெற்றாலும் திருமாவின் பேட்டிகள், அவ்வப்போது அவர் கூறி வந்த கருத்துக்கள், திமுக-வுடன் காட்டி வந்த நெருக்கம் தவெக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வந்தது. இந்த சூழலில், விசிக மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து விசிக பயணிக்கும் என்ற அறிவிப்பை திருமாவளவன் அறிவித்துள்ளார். இது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேசினார். அப்போது அவர் மேகமலை விவகாரம், கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும், அதேபோன்று நேற்று நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் முதலமைச்சரிடம் பேசியதாக கூறப்படுகிற்து.
இந்த சந்திப்புக்குப் பின்னர் திருமாவளவன் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தவெகவோடு நாங்கள் இணைந்து நூறு நாட்கள்தான் ஆகின்றன. அவர்களோடு தொடர்ந்து இணைந்து பயணிப்போம். அமுதன் விவகாரம் வெறும் பிரச்சனையாகவோ, யாங்க்ஸ்டர் பிரச்சனையாகவோ சிலர் சொல்கிறார்கள். அதனை புலனாய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் அமைக்க வேண்டும். அந்த ஒரு பிரச்சனைக்காக மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு போதைப் புழக்கம் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, அது குறித்து ஆய்வு செய்வதற்கும், அதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு அதிரடிப்படை உருவாக வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Comments are closed.