Rock Fort Times
Online News

முதல்வர் விஜய் விடுத்த அழைப்பு: நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக…!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக எம் பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், “மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, மாநில எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08-08-2026) மதியம் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமை வகிப்பார். இதற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதல்-அமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் உள்ளதாக தெரிகிறது. அதேபோல எம்.பி.க்கள் கூட்டத்தை தி.முக. புறக்கணித்துள்ளது. இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார். இதேபோல அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் எம்பிக்களும் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பியான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்