“கனத்த இதயத்தோடு அதிமுகவில் இருந்து விடைபெறுகிறேன்”…* எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் உருக்கம்…!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி போன்ற காரணங்களால் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இன்று (ஜூன் 16) ராஜினாமா செய்தார். அதேபோல அ.தி.மு.க.வில் இருந்தும் விலகுவதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் இயக்கம் வேதனை, சோதனைகளை எதிர்கொண்டுள்ளது.மனமெல்லாம் சீராக வேதனையை சுமந்தபடி என் பயணத்தை அங்கு தொடர்வது சரியாக இருக்காது. நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு நன்றி, வணக்கத்தை தெரிவித்து மனவலியோடு விலகுகிறேன். நான் விலகுவது ஒரு கட்சியில் இருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து… வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்தோடு இயக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன். என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும். என தெரிவித்துள்ளார்.
ஆடியோ பதிவு,
இதேபோல டாக்டர் விஜயபாஸ்கர் தனது தொகுதி மக்களுக்கு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“இது முடிவல்ல; தொடக்கம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதுமே தொகுதி மக்களுடன் இருப்பேன் என்றும், எந்த முடிவும் மக்களின் முடிவுதான் என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார். எந்தச் சூழலிலும் தான் எப்போதும் மக்களின் வீட்டுப்பிள்ளையாக இருப்பேன் என்றும், ஆயுள் வரை தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Comments are closed.