திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? ஜூன் 11ம் தேதி ‘சஸ்பென்ஸ்’ உடைக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்..!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அவர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அரசியல் சட்ட விதிகளின்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தவகையில் முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து உள்ளார். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட பலர் முட்டி மோதி வரும் நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், ”திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்த தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கின்றனர். இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன். தற்போது நான் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன். இந்தப் பணிகள் ஜூன் 10ம் தேதியுடன் நிறைவடைகின்றன. என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வருகிற ஜூன் 11-ம் தேதி, வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.